இறைவனின் திருப்பெயரால்....

Pages

Sunday, June 1, 2014

ஜுன் - 1 -சிறைச்சாலை நினைவுகள்

தமுமுகவின் வரலாற்றில் சிறைச்சாலைகளும், முன் எச்சரிக்கை கைதுகளும், தடையை மீறும் போராட்டங்களும் தவிர்க்க முடியாதவை.
1995 முதல் 1999 & ஜுலை 4 பேரணி வரை அடக்குமுறைகளை சந்தித்தே எமது பயணம் நகர்ந்தது.
டிசம்பர் 6 போராட்ட களங்களை முன்வைத்தே, ஏராளமான முன் எச்சரிக்கை கைதுகள் நடைபெற்றன. ஒவ்வொரு ஊரிலும் நிர்வாகிகளும், தொண்டர்களும் கூட்டம், கூட்டமாக கைது செய்யப்பட்டு தமிழகமெங்கும் உள்ள மத்திய சிறைகளில் பூட்டப்படுவார்கள்.
காலையில் கைதாகி, மாலையில் விடுதலையாகும் ஒருநாள் மண்டப சிறை கைதுகள் அல்ல அவை!
கொப்பளிக்கும் உணர்வுகளுடனுன், சிவக்கும் விழிகளுடனும், அடக்குமுறைகளை எதிர்த்து களமாடிய நாட்கள் அவை.
அவற்றுள் மறக்க முடியாத ஒரு சிறைச்சாலை அனுபவங்களை இங்கே பகிர்ந்து கொள்ள விரும்புகிறோம். இவை தம்பட்டம் அல்ல; இயக்கத்தில் இணைந்து வரும் புதிய தலைமுறைகளுக்கான பாடங்கள்!
அந்த நாள் மே, 31. 1999.
அன்றைய தினம் சென்னையில் சில இடங்களில் வெடிக்காத குண்டுகள் கண்டெடுக்கப்பட்டன. சென்னை மாநகரம் பீதியில் ஆழ்ந்தது. பதற்றம் பரவியது.
முஸ்லிம்களுக்கு மத்தியில் நடுக்கம்! யாரோ செய்கின்ற தீய வேலைகளால், சம்மந்தம் இல்லாமல் ஒரு சமுதாயத்தின் மீது அரசு இயந்திரங்கள் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமே என்ற நியாயமான கவலை சூழ்ந்தது.
இறையருளால், அக்குண்டுகள் எதுவும் வெடிக்கவில்லை. பாவிகளின் திட்டங்கள் பலிக்கவில்லை. அதனாலேயே அந்நிகழ்வு இப்போதும் ‘வெடிக்காத வெடிகுண்டு’ என வர்ணிக்கப்படுகிறது.
இச்சூழலில்தான், அப்போது பதட்டத்தை தணிக்கிறோம் என்ற பெயரில் தமிழகமெங்கும் முன் எச்சரிக்கை கைதுகளை அரசு நடத்தியது.
காவல்துறை முடுக்கி விடப்பட்டது. மஹல்லாக்களில் காவல்துறையின் வாகனங்கள் உறுமிக் கொண்டு சீறிப்பாய்ந்தன.
அடுத்த நாள் ஜுன் 1, நான் அப்போதுதான் சென்னையிலிருந்து புறப்பட்டு ஊருக்கு (தோப்புத்துறைக்கு) போயிருந்தேன்.
காலை தொழுதுவிட்டு வீட்டில் படுத்திருந்தேன். அப்போது அலைப்பேசிகள் பரவலாக எல்லோரிடமும் இல்லாத நேரம். என் வீட்டு தொலைப்பேசி ஒலித்தது.
மாவட்ட துணைத்தலைவராக இருந்த ஷாஃபி அவர்களை காவல்துறை கைது செய்திருப்பதாக தகவல் வந்தது.
உடனே நான் புறப்பட்டு பஜாருக்கு போகிறேன். என்ன விஷயம்--? என அங்கிருந்த காவலர்களிடம் கேட்கிறேன். அப்போது நான் மாணவரணி தலைவர்.
முக்கிய விஷயமாக பேசவேண்டும் வாருங்கள் என என்னையும் ஷாஃபியுடன் அழைத்து சென்றார்கள். நான் கிளைக்கழக சகோதரர்களை, நீங்கள் யாரும் வரவேண்டாம் என்று கூறிவிட்டு வேதாரண்யம் காவல்நிலையம் நோக்கி புறப்பட்டோம்.
அங்கு போனதும் நாங்கள் கைது செய்யப்படுவதாக காவலர்கள் கூறினர். எதற்கு? எனக் கேட்டபோது தமிழகமெங்கும் முன் எச்சிரிக்கை கைதுகள் நடைபெறுகின்றன என்றார்கள். காவல்நிலையத்தில் இருந்த வானொலி செய்தியிலும், இச்செய்தி ஒலிப்பரப்பானதை கேட்டோம்.
அதற்குள் மற்ற நிர்வாகிகளை எல்லோரும் தலைமறைவாகி விடுங்கள் என தகவல் அனுப்பினோம்.
எங்கள் இருவர் வீடுகளிலும் கவலை ஒருபுறம். திட்டு மறுபுறம்!
போலீஸ் ஸ்டேஷன், வழக்கு, கைது, சிறைச்சாலை எல்லாம் அப்போது சமூகத்தில் தீண்டாமையாக கருதப்பட்டிருந்த காலமல்லவா? ஏதோ நாங்கள் குடும்பத்தினருக்கு இழிவை ஏற்படுத்திவிட்டதைப் போல அவர்கள் எல்லோரும் கவலையடைந்தார்கள்.
காவல் நிலையத்தில் நாங்கள் இருந்தபோது, அதிகாரிகள் முதல் தகவல் அறிக்கையை எழுதிவிட்டு, எங்களிடம் கையெழுத்து கேட்டார்கள். நாங்கள் எங்கள் ஊர் ரயில் நிலையத்தில் சந்தேகப்படும்படியாக சுற்றிக் கொண்டிருந்தோமாம்!
காலையில் தொடங்கி மதியம் வரை வேதாரண்யம் காவல் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்தோம். எங்கள் வீடுகளிலிருந்து மாற்று துணிகளை வரவழைத்தோம்.
மதியம் 4 மணிக்கு திருத்துறைப்பூண்டி நீதிமன்றத்தில் நாங்கள் நிறுத்தப்பட்டோம். சற்று நேரத்தில் அங்கு முத்துப்பேட்டை அன்சாரி தலைமையில் ஒரு குழு கைது செய்யப்பட்டு வந்து சேர்ந்தது.
நாங்கள் அங்கிருந்து திருச்சி மத்திய சிறைச்சாலைக்கு கொண்டு செல்லப்பட்டோம். இரவு 10 மணி ஆயிற்று. சிறை வாசலில் நீண்ட இரண்டு வரிசைகளில் இயக்க சகோதரர்கள் அங்கு நின்றுக் கொண்டிருந்தார்கள்.
தமிழகத்தின் பல்வேறு இடங்களில் கைது செய்யப்பட்டவர்களை பார்க்க முடிந்தது. ஒருவருக்கொருவர் சலாம் சொல்லிக்கொண்டோம்.
நாங்கள் ஒருவர்பின் ஒருவராக சோதனையிடப்பட்டோம்.
சினிமாவில் மட்டுமே பார்த்திருந்த சிறையின் வெளித்தோற்றத்தை அருகில் இருந்து பார்த்தோம்.
அந்த இரவு நேர அமைதியில், மனம் ஏதேதோ சிந்தனைகளில் சுற்றி வந்தது. எத்தனை நாட்கள் சிறைகளில் கழிக்கப் போகிறோமோ? என ஒவ்வொருவரும் யோசித்துக் கொண்டிருந்தோம்.
நீண்ட வரிசையில்; நீண்ட நேரத்திற்கு பிறகு சிறைக்கதவுகள் திறந்தது. உள்ளேயும் சோதனை. மங்கலான வெளிச்சத்தில் ஆங்காங்கே ஓடுகள் வேய்ந்த கட்டிடங்கள் காட்சியளித்தன. ஒன்றும் புரியவில்லை.
ஒரு பெரிய கட்டிடத்தை திறந்தார்கள். எங்களில் சிலர் அதில் அடைக்கப்பட்டோம். குழு, குழுவாக நாங்கள் பிரித்து தங்க வைக்கப்பட்டோம்.
உள்ளே நுழைந்ததும் ஒருவகை நாற்றம். பல சமூக விரோத செயல்களை செய்தவர்கள் தூங்கிக் கொண்டிருந்தனர்.
எங்களுக்கு அருவெறுப்பாக இருந்தது.
இவ்வளவு பெரிய கட்டிடத்தில் மிகுந்த உயரத்தில் இரண்டு மின்விசிறிகள் மெதுவாக சுழன்றுக் கொண்டிருந்தது.
எங்களுக்கு புழுக்கம் ஒருபுறம், மயக்கம் ஒருபுறம். நாங்கள் உட்காரவும், படுக்கவும் மனமில்லாமல் இருந்தோம். வேறு வழியில்லை. அசதியில் தூங்கிவிட்டோம்.
காலை 5:30 மணி இருக்கும். காவலர்கள் எங்களை எழுப்பினார்கள் வரிசையில் குந்தியப்படி உற்கார சொன்னார்கள்.
வரிசையில் நிறுத்தி எண்ணிக்கைகளை சரிப்பார்த்தனர். அதன் பிறகு வெளியே போகச் சொல்லினர். சூரியன் தலைக்காட்டியது.
வெவ்வேறு இடங்களில் தங்கியவர்கள் சற்று நேரத்தில் ஓரிடத்தில் திரண்டோம்.
அப்போதுதான் யார், யார் கைது செய்யப்பட்டிருக்கிறோம் எனத் தெரிந்தது. எல்லோர் முகத்திலும் , பேச்சிலும் அரசுக்கு எதிரான கோப அலை வீசியது. தாங்கள் எங்கு, எப்படி கைது செய்யப்பட்டோம் என ஒவ்வொருவரும் விளக்கிக் கொண்டிருந்தார்கள்.
திருச்சி, பெரம்பலூர், தஞ்சை, நாகை, திருவாரூர், புதுக்கோட்டை, மதுரை, தேனி, திண்டுக்கல், திருநெல்வேலி, கன்னியாகுமரி, விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் திருச்சி சிறையில் பூட்டப்பட்டிருந்தார்கள்.
தற்போது மமக மாநில அமைப்புச் செயலாளராக இருக்கும் மைதீன் உலவி, மாநில செயற்குழு உறுப்பினர் ரவிபுதூர் கடை காதர்மெய்தீன், கும்பகோணம் ராஜ் முஹம்மது என பலர் ஞாபகம் உள்ளது. இப்போது TNTJ அமைப்பில் இருக்கும் முத்துப்பேட்டை அன்சாரி, INTJ அமைப்பில் இருக்கும் நாச்சியார் கோயில் ஜாபர் என பட்டியல் நீளமானது.
அப்போது தமுமுகவினர் மட்டுமின்றி தேனி மாவட்டத்தை சேர்ந்த ஜிஹாத் கமிட்டியினரும் கைதாகி வந்திருந்தனர்.
சில தப்லீக் ஜமாத்தினர் சுபுஹ் தொழுதுவிட்டு வீதிகளில் வந்த போது அவர்களும் கைதாகி வந்திருந்தனர். அவர்களை பார்க்கவே பாவமாக இருந்தது.
ஒரு ஊமை, ஊனமுற்றவர், ஒரு முஸாஃபர் என சம்பந்தமில்லாதவர்கள் கூட கணக்கு காட்டுவதற்காக கைது செய்து அழைத்து வரப்பட்டிருந்தனர். இது காவல்துறையின் அநீதிகளுக்கு சாட்சியாக இருந்தது.
கொஞ்ச நேரத்தில் சிறை கண்காணிப்பாளர் எங்களை சந்திக்க வந்தார். அவரிடம் எங்கள் எல்லோரையும் ஒரே இடத்தில் தங்க வைக்குமாறு கேட்டோம். அவரும் அதற்கு ஏற்பாடு செய்த கொடுத்தார்.
நாங்கள் காலை கடன்களை முடிக்க கழிவறைப் பகுதிக்கு போனோம். குமட்டல் வந்தது. ஒருவரை ஒருவர் பார்க்கும் அளவுக்கு சூழல் இருந்தது. அந்த நிமிடங்கள் கொடுமையானவை.
குளிப்பதற்கு பெரிய தண்ணீர் தொட்டி இருந்தது. காவிரி தண்ணீர் கொட்டியது. அங்குள்ள ஒரேயொரு சுகமான அனுபவம் அது மட்டும்தான். தொட்டிக்கு வெளியே நின்று எல்லோரும் குளித்தோம்.
அது ‘தேனீர்’ தான் என கூறும் அளவுக்கு தேனீர் கிடைத்தது. காலை உணவு பொங்கல் என ஞாபகம்.
9 மணிக்கு பிறகு ஒரு வேளையும் இல்லை. ஒரு மரத்தடியில் எல்லோரும் போய் உட்கார்ந்தோம். மொத்தம் 200 பேர் இருக்கும். எல்லோரையும் கூட்டி வைத்து ஒருவர் பின் ஒருவராக உரையாற்ற செய்தோம்.
எனது முறை வந்தது. அனல் கக்க ஆட்சியாளர்களுக்கும், காவல்துறைக்கும் எதிராக கொட்டி தீர்த்தேன். எல்லோருக்கும் ஒரு சின்ன ஆறுதல்!
பிறகு ஒருவருக்கொருவர் அறிமுகமாயினர். பழைய தொடர்பில் இருந்தவர்களும் அநேகம் பேர் இருந்தனர். அது ஒரு ‘மினி’ செயற்குழு.!
ஆம்! சிறைச்சாலையில் ஒரு செயற்குழுவையே நடத்தினோம்!
மதியம் 12 மணி இருக்கும். அளவு சாப்பாடு ஒரு வட்ட வடிவ தட்டையில் வைக்கப்பட்டிருந்தது. சாம்பார், கெட்டிதயிர், கொண்டக்கடலை இருந்தது. பரவாயில்லை.
சாப்பிட்ட பிறகு எல்லோரும் தொழுதோம். மீண்டும் சபை கூடியது. சிலர் தூங்கினர். அங்கு வெளியே நல்ல காற்று வரும்.
மாலை 5 மணி ஆனதும், இரவு சாப்பாட்டிற்கு வரிசையில் நின்றோம். 6 மணிக்கெல்லாம் மீண்டும் சிறை அறைக்குள் பூட்டப்பட்டோம். உள்ளேயே தொழுகை நடந்தது.
இரவில் பயன்படுத்த உள்ளே ஒரு கழிப்பறை உண்டு. ஆனால் எல்லோரும் பார்க்கும் வண்ணம் இருக்கும். மிகவும் கூச்சமாக இருக்கும். இது ஒரு அப்பட்டமான சித்ரவதையாகும்.
8 மணிக்கெல்லாம் இரவு 12 மணி போல சிறை வளாகம் இருந்தது. மயான அமைதி.
எங்களுக்கு தூக்கம் வரவில்லை. ஒரே கவலை. வீட்டில் உள்ளவர்களின் மனநிலை குறித்து ஒருபுறமும், தமிழக நிலவரம் குறித்து ஒரு புறமும் மனம் அலைபாய்ந்தது.
இரவில் புழுக்கம் தாங்க முடியவில்லை. இரவு 10 மணி இருக்கும். நான் எழுந்து அங்கிருந்த ஒரே ஒரு சிறிய ஜன்னல் அருகே காற்றுக்காக காத்திருந்தேன். அதை நினைத்தாலே வேர்க்கிறது.
பிறகு தூங்கினோம்.
காலையில் 5:30 க்கு எழுந்தோம். தொழுதோம். முந்தைய நாள் நிகழ்வுகள் தொடர்ந்தது.
நானும், ரவிபுதுர் கடை. காதர் மெய்தீனும் சிறை வளாகத்தை சுற்றிப் பார்க்க புறப்பட்டோம். பாரதியார் இருந்த இடத்தை காவலர்கள் காட்டினார்கள். சுதந்திர போராட்ட தியாகிகள் தங்கியிருந்த இடங்களையெல்லாம் பார்த்தோம்.
அல்உம்மாவினர் தனியாக ஓரிடத்தில் வைக்கப்பட்டிருந்தனர். யாரும் அவர்களை பார்க்க முடியாது.
அப்படியே சுற்றி வந்தபோது ஒரு அறையில் பிரேம்குமார் வாண்டையார் இருந்தார். தற்போது மூவேந்தர் முன்னேற்றக் கழகத்தின் தலைவராக இருக்கும் ஸ்ரீதர் வாண்டையாரின் அண்ணன். அப்போது அவர்தான் அக்கட்சியின் தலைவர். சிதம்பரம் பழனிச்சாமி கொலையில் கைதாகி இருந்தார். கொஞ்ச நேரம் அப்படியே பேசிக் கொண்டிருந்தோம்.
சுற்றி வந்ததால் தண்ணீர் தாகமாக இருந்தது. தண்ணீர் தொட்டியிலிருந்து தண்ணீர் வழிந்துக் கொண்டிருந்தது. ஆனால் குவளை இல்லை.
வேறுவழியின்றி, கழிவறைக்கு போய் அங்கிருந்த ஒரு குவளையை கழுவி அதில் தண்ணீர் குடித்தோம். மிகக் கொடுமையான நிமிடங்கள் அவை. சிறையில் கைதிகள் சந்திக்கும் மனித உரிமை சிக்கல்களில் இதுவும் ஒன்று.
இரண்டாம் நாள் சில செய்தித்தாள்கள் உள்ளே வந்தது. எங்கள் கைதுகள் குறித்து விவரங்களை அறிந்தோம். இதுபோல் பல சிறைகளிலும் சகோதரர்கள் கைது செய்யப்பட்டிருப்பதை படித்தோம். செய்தித்தாள்களை படிப்பதற்கு பெரும் போட்டி நிலவியது.
உள்ளே நீண்டநாள் கைதிகள் மூலம் வியாபாரமும் நடந்தது. டீ விற்பனை உண்டு. தண்டனை கைதிகள் சிலர் முடிவெட்டும் தொழிலை செய்தனர். அங்கு அவர்களுக்கு சில சலுகைகள் உண்டு. அங்கு ஒரு மருத்துவமனையும் செயல்பட்டது.
இரண்டாம் நாள் இரவில் மைதீன் உலவியின் தலைமையில் ஒரு பட்டிமன்றத்தை நடத்தினோம்.
மூன்றாம் நாள் காலை விடிந்தது. வானொலி செய்திகளை ஒளிபரப்பினார்கள். அதில் 1999 & ஜுலை 4 தமுமுக சார்பில் நடைபெறவிருக்கும் மாநாட்டில், ஜெயலலிதா கலந்து கொள்ளவிருப்பதாக செய்தியை கேட்டோம். ஒரே பரபரப்பு. அன்று முழுக்க எங்களுக்கு அதுதான் பரபரப்பு செய்தி.
சம்பந்தம் இல்லாமல் யாரோ தீய சக்திகள் வைத்த வெடிக்காத வெடிகுண்டு ஊடகங்களில் விவாதங்களாயின. இது காவல்துறையின் நாடகம் என்றும் ஒரு தரப்பால் குற்றம் சாட்டப்பட்டது.
தேவையில்லாமல் தமிழகமெங்கும் முஸ்லிம்கள் கைது செய்யப்பட்டதற்கு கடும் கண்டனங்கள் எழுந்தன.
நான்காம் நாளில் எங்களில் ஒரு பகுதியினர் விடுதலை செய்யப்பட்டோம். அதில் நானும் விடுதலையானேன். நான்கு நாட்களாக ஒன்றாக இருந்து விட்டு பிரியும்போது ஒரு அழுத்தமாக இருந்தது. வெளியே களங்களில் மீண்டும் சந்திப்போம் என கூறிவிட்டு புறப்பட்டோம்.
திருச்சி சிறைவாயிலிலிருந்து நான் வெளியே வர, என்னையும், ஷாபியையும் பார்க்க எங்கள் ஊரிலிருந்து நிர்வாகிகள் ஷேக், மஜீது ஆகியோர் வந்திருந்தனர்.
நான் வெளியே வந்ததும் அவர்களுக்கு அதிர்ச்சி. அவர்களை பார்த்ததும் எனக்கு அதிர்ச்சி. உள்ளே எங்களை சந்திக்க வந்தவர்களுக்கு வெளியே என்னை பார்த்ததும் குழம்பி விட்டார்கள்.
ஷாஃபி நாளைதான் விடுதலை ஆவார் என அவர்களிடம் கூறினேன். பிறகு நாங்கள் திருச்சியிலிருந்து தஞ்சை வழியாக தோப்புத்துறைக்கு புறப்பட்டோம்.
வீட்டுக்கு எப்படி போவது? திட்டுவார்களே என்ற பயம் ஒரு பக்கம். ஒரு வழியாக மாலை 6 மணிக்கு வீட்டிற்கு வந்தேன். வீட்டில் ஒரே மவுனம். அவ்வளவாக யாரும் பேசவில்லை.
நாம் என்ன சமூகவிரோத செயலையா செய்துவிட்டு போனோம். சமுதாயத்திற்காகத்தானே போனோம் என்ற மனநிறைவு எனக்கு.
இன்று நினைத்துப் பார்க்கிறேன். சரியாக 15 ஆண்டுகள் இன்றோடு நிறைவடைகிறது. ஜுன் & 1, 2014&ல் தலைமையத்தில் உட்கார்ந்து நினைவுகளை எழுதிக் கொண்டிருக்கிறேன்.
நாடெங்கிலும் அப்பாவிகள் வருடக்கணக்கில் சிறையில் வாடுவதை ஒப்பிட்டால் இதுவெல்லாம் பெரிய விஷயமில்லை. ஆனால் ஜனநாய களத்தில் தாய்க்கழகமும், அதன் நிர்வாகிகளும், தொண்டர்களும் நிறைய சிரமங்களை எதிர்கொண்டே தங்கள் பொதுவாழ்வை நடத்திக்கொண்டிருக்கிறார்கள் என்பதை பகிர்வதற்காகவே இதை குறிப்பிட வேண்டியுள்ளது.
ஆம். இன்று நாம் அடைந்திருக்கும் வளர்ச்சியும், எழுச்சியும் சும்மா வந்துவிடவில்லை. ஆயிரக்கணக்கான தொண்டர்களின் தியாகங்களால் வந்தது.
அடக்குமுறைகள் எங்களை வீழ்த்திடவில்லை. மாறாக வளர்த்தது.
எல்லா புகழும் இறைவனுக்கே!
எம். தமிமுன் அன்சாரி

0 comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை தமுமுக எவ்வகையிலும் பொறுப்பாகாது.